Friday, November 11, 2011

கேன்சர் கல்பாக்கம் போல கேன்சர் கூடன்குளமாக மாற வேண்டுமா??? சிந்தியுங்கள் தமிழினமே !!!

கேன்சர் கல்பாக்கம் போல கேன்சர் கூடன்குளமாக மாற வேண்டுமா??? சிந்தியுங்கள் தமிழினமே !!!

இத்தனை மாநிலங்கள் இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரண்டு அணு உலைகள்????

அணு சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரித்தாலும் சரி, எதைத் தயாரித்தாலும் அணுக்கழிவு என்பதே ஆபத்தானது. இன்று வரை உலகில் எங்கும் அணுக்கழிவை சக்தியிழக்கச் செய்து பாதுகாப்பானதாக ஆக்க எந்த தொழில் நுட்பமும் கிடையாது. கூடன்குளம் கல்பாக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களும், அங்கே தற்காலிக வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் சுற்று வட்டாரக் கூலித்தொழிலாளர்களும், அந்த வட்டாரப் பகுதி மக்களும் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் .கிடைக்கும் தகவல்களின் படி ஏற்கனவே கல்பாக்கத்தில் அணு மின் நிலைய மருத்துவமனையிலேயே 167 பேர் புற்று நோய அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மெரினாவானாலும் சரி , மகாபலிபுரமானாலும் சரி இரண்டுமே கல்பாக்கத்திலிருந்து எவ்வளவு தொலைவு என்பதுதான் முக்கியம். சென்னை 60 கிலோமீட்டருக்கும் குறைவு. மகாபலிபுரம் 10 கிலோமீட்டருக்கும் குறைவு. கல்பாக்கத்தில் ஒரு விபத்து நடந்தால் போதும். சென்னை நகரம் அவ்வளவுதான்.

இந்து ' ஏட்டில் ஒரு கட்டுரையில் ' குறைந்த அளவு கதிர்வீச்சு மனிதனுக்கு நலம் தருவதென்று ஒருபோதும் நிறுவப்படவில்லை. . அது மட்டுமல்ல. இதே கட்டுரையில் அவர் ஐ.நா சபையின் அறிவியல் குழு, குறைவான கதிர் வீச்சு அளவு என்ற கோட்பாட்டையே ஏற்க மறுத்துவிட்டது என்று கூறியிருக்கிறார். அதாவது ஒருவர் வருடத்தில் எந்த அளவுக்கு கதிர் வீச்சை உடலில் வாங்கிக் கெ 'ள்ளலாம் என்பதற்கு அளவு நிர்ணயிக்க முடியும் என்பதையே அந்த குழு நிராகரித்து விட்டது.

பல மேலை நாட்டு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான கதிர்வீச்சு ( 30 மடங்கு குறைவாக இருந்தபோது கூட) புற்று நோய் ஏற்பட்டது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Rosalie Bertell, Chris Busby என்று புகழ் பெற்ற ஆய்வாளர்களின் விவரமான அறிக்கைகள் இணைய தளத்தில் படிக்கக்கிடைக்கின்றன.

ஆனால், கல்பாக்கத்திலும் இந்தியாவின் மற்ற அணு உலைகளிலும், ஊழியர்கள் வருடத்தில் இந்த அளவு கதிர் வீச்சு வாங்கினால் ஆபத்து இல்லை என்று ஒரு அளவை வைத்துக் கொண்டுதான் இந்த நிர்வாகங்கள் வேலை வாங்கி வருகின்றன. ஊழியர்கள் அணியும் பிலிம் பேட்ஜில் கதிரியக்கம் பதிவாகும். இதைக் கொண்டுதான் அவருக்கு எவ்வளவு கதிர் வீச்சு ஊடுருவியது என்பது தெரியும். உள் ஊடுருவலை அளக்க தனி கருவி, தனி சோதனை தேவை.

இதில் கொடூரம் என்னவென்றால் எந்த ஊழியருக்கும் அவர் எந்த அளவுக்கு கதிர் வீச்சை வாங்கியிருக்கிறார் என்பதைத் தெரிவிப்பதில்லை. அவர் ஆபத்தான அளவுக்கு வாங்கிவிட்டார் என்று நிர்வாகம் கருதும்போதுதான் அவருக்கு தெரிவிக்கப்படும். என் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவ்வப்போது வங்கியில் விசாரிக்கும் உரிமையை விட அதி முக்கியமான இந்த உரிமை ஊழியருக்குக் கிடையாது.

கல்பாக்கத்தில தற்காலிக வேலைக்காக பக்கத்து கிராமங்களிலிருந்து அழைத்து வரப்படும் படிப்பறிவற்ற கூலித் தொழிலாளர்களின் நிலைமை என்ன ? தினம்தோறும் கூலித் தொழிலாளர் பத்திரிகை படிப்பவர்கள் அல்ல.பத்திரிகை படித்தால் கதிர்வீச்சு பற்றி எதிலேனும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்.

சுரேஷ் என்ற தற்காலிக ஊழியர் ( வயது 26) 2001ல் நிண நீர் சார்ந்த புற்று நோயில் ( non-hodghkins lymphoma) இறந்து போனார். ஆறுமுகம் என்ற தற்காலிகத்தொழிலாளருக்கு 24 வயதிலேயே 50 வயதுக்காரர்களுக்கு மட்டுமே பொதுவாக வரக்கூடிய குடல் புற்று நோய் ஏற்பட்டு செத்துப்போனார். செல்வகுமார் என்ற தற்காலிக ஊழியர் ( வயது 20) 9-7-2002 அன்று cotress spring என்ற பொருளை flaskலிருந்து எடுக்கும்படிபணிக்கப்பட்டார். எடுத்ததும் எச்சரிக்கை மணி ஒலித்தது. காரனம் அது அதிகக் கதிரியக்கம் உள்ள பொருள். அவரது மருத்துவப் பரிசோதனையில் ரத்தத்தில் neutrophils எண்ணிக்கை 22 சதவிகிதம்தான் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சாதாரணமாக இது ஒருவருக்கு 40 முதல் 75 சதம் வரை இருக்க வேண்டும். குறைந்திருப்பதற்கு கதிர்வீச்சு பாதிப்பே காரணம். உள் ஊடுருவல் கதிர்வீச்சை அளவிடும் கருவி தனியார் யாரிடமும் கிடையாது. அணு சக்தி அமைப்பிடம் மட்டுமே உண்டு.

இவ்வளவு அஜாக்கிரதை நிலவும் கல்பாக்கத்தில் பெரிய விபத்து ஏற்பட்டால் நீங்கள், நான், ஒரே கதியைத்தான் அடைவோம். அப்படி பெரிய விபத்து ஏற்படாமல் இதுவரை இருப்பதற்குக் காரணம், சிறப்பான பாதுகாப்பு அக்கறை அல்ல. உங்கள் நம்பிக்கைப்படி பார்த்தால் கடவுள்தான் காப்பாற்றிவருகிறார். என் கருத்தில், தற்செயலாக தப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
பெரிய விபத்து நடந்துவிடக் கூடாதே என்ற கவலை அதிகமாவதற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரப் பின்பற்றப்படுவதில்லை என்பதால்தான். ஆனால் இதை வெளியில் தெரியவிடாமல், அணு சக்தி சட்டம், ரகசியம் என்று பயமுறுத்தி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அணு உலைப் பணியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பது உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால், மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டபிறகும்,


ஒரே பிரிவில் பணியாற்றி 'குறைந்தபட்சக் கதிர்வீச்சு ' பெற்று செத்துப்போனவர்கள் பட்டியல் இதோ : திரு மோகன் தாஸ். இவருக்கு multiple myeloma. கதிரியக்கத்தால் வரும் சகஜமான புற்று நோய் இது. எலும்பு மஜ்ஜைப் பகுதியில் உருவாகும் பிளாஸ்மா செல்களை பாதிப்பது. அடுத்தவர் திரு சிவசங்கரன் பிள்ளை. ரத்தப் புற்று நோய். திரு செல்லப்பன் என்பவரின் குழந்தை ஊனமாகப் பிறந்து இறந்துவிட்டது. திரு கான் என்பவருக்கு பிறப்புறுப்பில் புற்று நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் வாழ்ந்து வருகிறார். நால்வரும் கல்பாக்கத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள்.
பாதிக்கப்படுவது கல்
பாக்கத்தில் பணி புரியும் ஊழியர்களும் குடும்பத்தினரும் மட்டுமல்ல.சுற்று வட்டாரங்களிலும் கதிரியக்கம் இருக்கிறது. ( ஏற்கனவே மீன்வளம் இந்தப்பகுதியில் பாதிக்கப்பட்டுவிட்டது தனிக்கதை.) மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஒரு சாட்சியம் ஆறாவது விரல்.
சினிமாவில் டபிள் ரோல் செய்யும்போது இரட்டையரில் ஒருவருக்கு மட்டும் ஆறு விரல் என்பதை வைத்து வில்லனை அடையாளம் கண்டுபிடிக்கச் செய்வது ஒரு உத்தி. உண்மையில் ஆறு விரல் என்பது மரபணு சிதைவின் அடையாளம். நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் ( consanguinous marriage) செய்வது பல மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதன் ஒரு வெளிப்பாடு ஆறு விரல். மருத்துவ ரீதியாக இது polydoctyly syndactyly என்று அழைக்கப்படுகிறது. ஆறு விரலுக்கு இத்தகைய மண உறவு அல்லாத காரணம் கதிர்வீச்சுதான். கதிரியக்கம் செல்களை பாதிப்பதால் இது ஏற்படுகிறது.

கடலோரம் உள்ள கல்பாக்கத்தின் வடக்கே 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவளம் இருக்கிறது. இடையில் புதிய கல்பாக்கம், தேவநேரி,மகாபலிபுரம்,வெண்புருசம்,கொக்கிலமேடு முதலிய இடங்கள் உள்ளன. தெற்கே 45 கிலோ மீட்டர் தூரத்தில் மரக்காணம். நடுவே மெய்யூர் குப்பம், செட்ராஸ் குப்பம்,புதுப்பட்டினம் குப்பம், ஒய்யாலி குப்பம்,கடப்பாக்கம், கைப்பாணி குப்பம் முதலிய இடங்கள் உள்ளன.

இந்தப் பகுதிகளில் ஆறு விரல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்று ஆய்வு செய்தார். அதாவது நெருங்கிய உறவில் திருமணம் செய்யாத குடும்பங்களில் மட்டுமாக.12 வயதுக்குக் கீழே ஆறுவிரல்காரர்கள் எண்ணிக்கை : செட்ராஸ் குப்பம்- 2 டவுன்ஷிப்- 3 புதுப்பட்டினம் - 1 ஒய்யாலிகுப்பம் -2 தேவநேரி - 2 மகாபலிபுரம் - 1. இருபது 20 வயதுக்கு மேல் ஆறுவிரல்காரர்கள் எண்ணிக்கை - மரக்காணம் - 1, புதுப்பட்டினம் குப்பம் - 1, மெய்யூர் குப்பம் - 2 தேவநேரி குப்பம் - 3, ஒய்யாலிகுப்பம் - 4, செட்ராஸ் குப்பம் - 5.

முழு நேர ஊழியர்கள் சார்பில் தயங்கித் தயங்கியாவது குரல் எழுப்ப தொழிற்சங்கம் இருக்கிறது. காண்ட்டிராக்ட் கூலிகளாக வரும் எண்ணற்ற படிப்பறிவற்ற இளம் தொழிலாளர்களுக்காகவும் அப்பாவி பொது மக்களுக்காகவும் குரல் தரக்கூட ஆள் இல்லை.

புற்று நோய் என்பது ஒரே நாளில் வெளிப்பட்டுவிடுவதில்லை. நீண்ட காலம் இருந்து தொல்லை தந்து உயிர் குடிப்பது. இவ்வளவு அபாயகரமான நோயை ஏற்படுத்தக்கூடிய கதிரியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாமே நம்க்கு அணுகுண்டு வைத்துக் கொள்ள வேண்டும்

கல்பாக்கம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கும் அதற்குக் கிடைக்கும் விலைக்கும் சம்பந்தமே கிடையாது. பெரும் நஷ்டம்தான். எதற்காக மத்திய அரசு தனக்கும் நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு தமிழக ஏழை மக்களுக்கும் புற்று நோயை ஏற்படுத்திக் கொண்டு கூடன்குளம் ,கல்பாக்கத்தில் மின்சாரம் தயாரிக்க வேண்டும் ?

நமது நாட்டின் அணுகுண்டு தயாரிப்பதுதான் அசல் நோக்கமாக இருக்கலாம். அதை வெளியில் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக தமிழக மக்கள் தரும் விலை என்ன ? தலைமுறை தலைமுறையாகப் புற்று நோய், genetic disorders, மலட்டுத்தன்மை இவற்றை எதற்காக தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் ? வட தமிழ்நாட்டு மக்களும் மீனவர்களும் பாதிக்கப்படுவது போதாது என்று தென் தமிழ் நாட்டு மக்களும் மீனவர்களும் பாதிக்கப்படுவதற்காகக் கூடங்குளத்தையும் தாரை வார்த்து வைத்திருக்கிறோம்.

கதிர்வீச்சு ஒரு விபத்து நடந்தால் போதும். செர்னோபில் கதி ஏற்படும். கதிர்வீச்சுக்கு ஆட்சி நடத்துவது அதிமுகவா, திமுகவா என்ற வேறுபாடுகளெல்லாம் கிடையாது. கடவுளை விடக் கதிர்வீச்சு சமத்துவத்தில் நம்பிக்கையுள்ளது. கடவுளாவது சிலரை ஏழையாகவும் சிலரை பணக்காரராகவும் சிலரை புத்திசாலிகளாகவும் சிலரைப் பாமரராகவும் படைத்துவிட்டார் என்கிறார்கள். கதிர்வீச்சு இந்த பேதம் எதுவும் பார்க்காது. அதற்கு நீங்களும் நானும் ஒன்றுதான்

இங்கு கல்பாக்கதை கேன்சர் கல்பாக்கம் என்றே அழைக்க துவங்கிவிட்டனர்

அணு மின் நிலையங்கள் மக்கள் உயிரினும் முக்கியமானதல்ல

Friday, June 24, 2011

ஃபேஸ்புக்கா? நோட்புக்கா?

அம்மா என் நோட்புக்கை காணோம் என்று அப்பாவியாக திரிந்து கொண்டிருந்த குழந்தைகள், தற்போது ஃபேஸ்புக்கில் அநாயசமாக புகுந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதென்ன ஃபேஸ்புக்? நம் நோட்டு புத்தகத்தில் நாம் மட்டுமே எழுதுவோம். நாம் விரும்பினால மட்டுமே மற்றவர்களுக்கு காட்டுவோம். ஆசிரியர்கள் சொல்வதைத்தான் நாம் எழுதுவோம். நாம் எழுதியதில் தவறு இருந்தால் ஆசிரியர் திருத்துவார். பெற்றோர்கள் அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

நம் ஃபேஸ்புக் என்பது ஒரு virtual உலகம். இன்டர்நெட்டில் இருக்கக் கூடிய ஒரு மாய புத்தகம். இந்தப் புத்தகத்தில் நீங்களும் எழுதலாம், உங்கள் நண்பர்களும் எழுதலாம். உங்கள் புத்தகத்தில் இருந்து அடுத்தவர் புத்தகத்திற்கு எளிதில் தாவலாம். அடுத்தவர், லாஸ்பேட்டையிலும் இருக்கலாம், லாஸ்ஏஞ்சல்ஸிலும் இருக்கலாம். அதாவது நமது புத்தகம் ஒரு திறந்த புத்தகம். இதில் எழுத்து, ஆடியோ, வீடியோ என சகலமும் இருக்கும். இதை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமே ஃபேஸ்புக்.


இதில் என்ன பிரச்சனை? பிரச்சனை இதில் அல்ல. இதை பயன்படுத்துபவர்களால் தான் பிரச்சனை. இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருடர்கள், கொள்ளையர்கள், சைக்கோக்கள், சைபர் கிரிமினல்கள் உட்பட. எனவே புதிதாக ஒருவர் அறிமுகமானால் அவர் யார் என்று தெரிந்து கொள்வதிலும், அவருடன் பழகுவதிலும் சிக்கல் ஆரம்பிக்கிறது. நமக்கே இப்படி என்றால், குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?

கடந்த மாதம் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருடன் +2 படிக்கும் அவருடைய மகன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், உன்னுடன் என் மகனைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது என்றார். அந்த உரையாடலை படியுங்கள்.

அவர் :
போன வாரம் பசங்களோட ஊட்டி போயிட்டு வந்தோம். வந்த அடுத்த நாளே, எங்களோட ஃபோட்டோ எனக்கே இமெயில்ல வருது. எனக்கு ஷாக். ஏன்னா நான் யாருக்குமே ஃபோட்டோவை அனுப்பல. விசாரிச்சதுல, சின்னவன் தான் ஃபேஸ்புக்ல ஃபோட்டோவை போட்டிருந்தான்னு தெரியவந்தது. அவன் 9thதான் படிக்கறான்.அதுக்குள்ள எப்படி இதையெல்லாம் பழகினான்னே தெரியல. உனக்குதான் கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரியுமே.. ஃபேஸ்புக்னா என்னது..? அதுல இவன மாதிரி சின்னப்பசங்கள்லாம் இருக்கலாமா? கூடாதா?

அவர் சொல்லும்போதே, முகம் சிவந்து, கோபம் பொத்துக் கொண்டு வருவதை யூகிக்க முடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த +2 பையனை, எல்லாம் இவனாலதான்.. இவன்தான் அவனுக்கு கத்துக் கொடுத்திருப்பான் என்று அவனை கடிந்து கொள்ள ஆரமபித்தார். நான் இடை மறித்தேன். எனக்கு மாணவர்களையும், குழந்தைகளையும் கடிந்து கொள்வது பிடிக்காது. அவர்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொன்னால், எதையும் புரிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து.

நான் :
அவசரப்பட்டு குழந்தைகளை திட்ட வேண்டாம். அவர்கள் ஒன்றும் கிரிமினல் வேலைகளைச் செய்யவில்லை. சொல்லப் போனால், இந்த கால கட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத் தளம் (Social Networking Site) அது ஒரு வெப் சைட் அவ்வளவுதான். அங்கு நாம் நம் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதியதை பார்த்து கமெண்ட் கொடுக்க யாராவது வேண்டுமல்லவா, அதனால் நமக்கு நண்பர்கள் தேவை. எனவே நண்பர்களை இணைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடி பகிரந்து கொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் ஊட்டி புகைப்படத்தை, உன் மகன் இப்படித்தான் தன் நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளான் என்று நினைக்கிறேன்.

அவர் :
அவனாவது பரவால்ல. ஃபேஸ்புக்கோட சரி. இவன் Myspaceன்னு இன்னும் எது எதுலயோ மெம்பர் ஆகி வைச்சிருக்காங்க. படிக்கறதே இல்ல. சதா அதுலயே இருக்கான். உன்னை.... (என்று மீண்டும் மகனை அடிக்க கை ஓங்கினார்)

நான் :
அடடா...என்ன இது வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு சின்னப் பையனை இப்படி அதட்டுற. அவன் ஒண்ணும் தப்பு பண்ணல. Facebook என்பது போல Myspace என்பதும் ஒரு சமூக வலைத் தளம். இதுல மெம்பர் ஆகறதால ஒரு தப்பும் கிடையாது. உன் மகன்களைப் போலவே இதுல தினமும் குத்துமதிப்பா ஒரு நாளைக்கு 3 இலட்சம் பேர், உலகம் முழுக்க மெம்பர் ஆகிக்கிட்டே இருக்காங்க. ஃபேஸ்புக்ல இது வரைக்கும் 20 கோடி பேர் மெம்பர் ஆகியிருக்காங்க. அதுல நானும், உன் மகன்களும் இருக்கோம். இத்தனை பேர் அதுல இருக்கும்போது, அதைப் பத்தி தெரியாம இருந்தால்தான் தவறு. உன் மகன்களை பாராட்டு. அவங்க updatedஆ இருக்காங்க.

இதைக் கேட்டதும் அவருக்கு என் மேல் கோபம் வர ஆரம்பித்துவிட்டது.

அவர் :
பசங்களுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு கூட்டிட்டு வந்தா, நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறயே.. இத்தனை கோடி பேர் ஃபேஸ்புக்ல மெம்பரா இருக்காங்கன்னா, ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கும். ஃபேஸ்புக்கால நமக்கு என்ன பிரயோஜனம் சொல்லு?

நான் :
இது நல்ல கேள்வி. ஃபேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற எல்லா தளங்களிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. முதலில் நல்லதுக்கு வருகிறேன். இது தகவல் யுகம். SMS, Email என்று எல்லாமே எக்கச் சக்க வேகம். இதோட அடுத்த கட்டம்தான், சோஷியல் நெட் ஒர்க்கிங். ஒருத்தருக்கு எப்படி இமெயில் பற்றியும், எஸ்.எம்.எஸ் பற்றியும் தெரிந்து இருக்கணுமோ, அதே போல ஃபேஸ் பற்றியும் தெரிஞ்சு இருக்கணும். ஏன்னா? ஒரு தகவலை உடனடியா, உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் பலருக்கும், ஒரே ஒரு கிளிக்கில் தெரிவிக்க ஃபேஸ்புக்கால் முடியும். ஊட்டியில நீங்க எடுத்த ஃபோட்டோ, மொபைல் போன் வழியா, சென்னையில இருக்கற உங்க கம்ப்யூட்டருக்கு வந்து, அங்கே இருந்து ஃபேஸ்புக் வழியா, உலகம் பூரா பரவி, ஆஸ்திரேலியாவில இருக்கிற உங்க அத்தை பார்த்துட்டு, விசாரிக்கறாங்கன்னா சாதாரண விஷயமா? இது மாதிரி ஒரு கிளிக்குல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கவிதைகள் என அனைத்தையும் ஷேர் பண்ணிக்க முடியும். இவ்வளவு நல்ல நவீன விஷயத்தை உன் குழந்தைகள் தெரிந்து கொள்ளாமல் இருந்தால்தான் நீ கண்டிக்க வேண்டும். எனவே இனி அவர்களை திட்டாதே என்றேன்.

அவர் :
நல்லதுன்னு ஒண்ணு இருந்தா, நிச்சயம் கெட்டதுன்னு ஒண்ணு இருக்கும். ஃபேஸ்புககுல பசங்கள பாதிக்கிற விஷயங்கள் ஒண்ணு கூடவா கிடையாது?
பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மகனின் பள்ளித் தோழன் கையில் ரப்பர் பந்துடன் வந்துவிட்டான். இருவரும் உடனே
விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் -
நீ சொன்னது போலவே இதில் நெகட்டிவ் அம்சங்கள் பல இருக்கு. ஆபாச படங்கள், ஆபாச வீடியோக்கள், அருவருக்கத் தக்க பேச்சுகள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் உரையாடல்கள், ஒருவரை பலர் சேர்ந்து கேலி செய்தல், பெண்களை இழித்தல், தவறான வழிகாட்டும் இரகசிய சிநேகிதங்கள் என எல்லாமும் ஃபேஸ்புக்கில் உண்டு. எப்படி நம் வீட்டுக் குழந்தைகள் இயல்பாக ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல, இவர்களை குறி வைத்து மனதைக் கெடுக்க முயற்சிப்பவர்களும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வெளி உலகம் போலவே தான் இணைய உலககும் இயங்குகிறது. கெட்டவர்களும், தீயவைகளும் இங்கேயும் உண்டு.

அவர் -
நீ சொல்வதைக் கேட்டால் பயமாக இருக்கிறது. இதை குழந்தைகளிடம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டேன்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?

நான் -
இந்தக் கேள்வியை நீ கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். கட்டுப்படுத்துவது என்பது சரியான வார்த்தை. குழந்தைகளிடம் சமூக வலைத் தளங்களை முழுக்க மறைக்க முடியாது. அதில் மெம்பர் ஆகக் கூடாது என்று சொல்லக் கூடாது. சொல்ல சொல்லத்தான் அவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல், உடன் படிப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களே கூட மாணவர்களிடம் ஃபேஸ்புக் வழியாக பழகுகிறார்கள். எனவே அவர்களை தவிர்க்கச் சொல்லவே முடியாது.

அவர்-
ஃபேஸ்புக்கை முழுக்க தவிர்க்க முடியாது என்பது புரிந்து விட்டது. ஆனால் வேறு எப்படித்தான் அவர்களை கட்டுப்படுத்துவது?

நான் -
அவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன், பெற்றோர்களாகிய நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸில் friend என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனக்கு ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்களுக்கு மேல் உள்ளனர்.

அவர் -
ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆயிரம் நண்பர்களுக்கு மேல் இருக்காங்களா?

நான் -
ஆமாம், சிலர் 5000ம் நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜவாழ்க்கை நண்பர்களுக்கும், ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நிஜவாழ்க்கையில் Friend என்பவர் யார்? நமது நம்பிக்கைக்கு உரிய, நமது சுக துக்கங்களில் பங்கு கொள்கிற, நமது குடும்பத்தினருக்கும் தெரிந்த, நம்முடன் நீண்ட நாள் பழகியவர்தான் நண்பர். ஆனால் ஃபேஸ்புக்கில் Add Friend என ஒரே ஒரு க்ளிக்கில் ஒரு நண்பர் கிடைத்துவிடுவார். ஒரு நிமிடத்திற்கு ஒரு நண்பர் கிடைத்துக் கொண்டே இருப்பார்.

அவர் -
ஃபேஸ்புக்கில் கிடைக்கிற நண்பர்கள் உண்மையானவர்களா?

நான் -
அது சந்தேகம்தான். ஒரு கிளிக்கில் எப்படி ஒரு உண்மையான நண்பர் கிடைப்பார். பழகப்பழகத்தான் தெரியும். சிலர் வேறு ஒருவரின் ஃபோட்டோவை தன் முகமாக போட்டிருப்பார்கள். சிலர் தங்கள் வயதை குறைத்துப் போடுவார்கள். சிலர் தான் பெரிய வியாபார நிறுவனத்தின் அதிபதி என பொய் சொல்வார்கள். சில ஆண்கள் பெண்கள் படத்தைப் போட்டு மற்றவர்களை ஈர்த்து பணம் கறப்பார்கள்.
அவர் -
என்ன சொல்ற நீ? நீ சொல்றதைக் கேட்டால் இன்றைக்கே, என் குழந்தைகளை முழுக்க முழுக்க ஃபேஸ்புக் பக்கம் போகவிடாமல் செய்துவிடத் தோன்றுகிறது. ஆனால் நீ என்னடாவென்றால், இருக்கட்டும் பரவாயில்லை என்கிறாய்?

நான் -
இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். நம் குழந்தைகள் ஃபேஸ்புக்கில் இருக்கட்டும். ஆனால் தான் எப்படிப்பட்ட சூழலில் இயங்குகிறோம் என்பதைத் தெரிந்து இருக்கட்டும். அதை நாம் தான் சொல்லித் தரவேண்டும். நிஜ வாழ்க்கை Friendக்கும் ஃபேஸ்புக் Friendக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை தடுப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அவர் -
நான் இப்ப தடுக்கறதே இல்லை. தடுத்தா என் கூட சண்டை போடறாங்க. அதனால வேறவழியில்லாம விட்டுடறேன்.

நான் -
குழந்தைகள் மட்டுமல்ல, ஆண்-பெண் பேதமில்லாமல் பெரியவர்களும் தற்போது இதற்கு அடிமை ஆகிவிட்டார்கள். மொபைல் போன், இமெயில் போல, ஃபேஸ்புக் உலவலும் இப்போது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. கடந்த மாத ஆராய்ச்சியின்படி ஒவ்வொருவரும் தினசரி 20 நிமிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் நேரம் செலவழிக்கிறார்களாம். அப்படி இருக்கும்போது, நம் குழந்தைகளிடம் இருந்து இதை மூடி வைக்க முடியாது. ஆனால் அவர்களை கண்காணிக்கலாம்.

Friday, October 17, 2008

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது!

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்! சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள்.
அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.
கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.
தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.
ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.
எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். "ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக" ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.
"பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு" என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் 'மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்' என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.
திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் 'மக்கள் பிரதிநிதிகள்' ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.
அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். "தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா.." என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். "குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!" என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது 'முதலாளித்துவம் ஒழிக!'
•••
இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். "கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…" (நாணயம் விகடன், அக்15)
எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.
அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை 'நெருக்கடி' என்று கூறுகின்றது முதலாளித்துவம்.
வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி' தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக் கடன்.
இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.
"வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்" என்று முடிவு செய்தார்கள்.
ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.
நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். 'ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். தயங்கியவர்களிடம், '10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்' என்று ஆசை காட்டினார்கள். 'வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்' என்று வலையில் வீழ்த்தினார்கள். 'அதுவும் கஷ்டம்' என்று மறுத்தால், 'பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்' என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.
இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் 'கடன் வேண்டுமா?' என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல 'வீடு வேண்டுமா?' என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.
ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. 'விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்' என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.
ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. 'ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ' என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.
விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் 'வீடு வேண்டாம்' என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.
•••
இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?
ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.
எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். "இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு" என்று கோருகின்றார்கள் மக்கள்.
திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.
ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.
பொதுவாக, கடன் என்பது 'கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்' மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.
இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு 'மிக நம்பகமான கடன்கள்' என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.
பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! 'இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக'ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், 'ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய' டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!
பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!
•••
நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை 'டர்ர்ர்' என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.
35 இலட்சம் கோடி 'மொய்'ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த 'சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்'துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ 'அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை' என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?
அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 'சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!' என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?
முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். 'கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது' என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?
"தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்" என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், "அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்" என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.
யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?
•••
தாங்கள்அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், 'போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்' ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?
பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். "ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்" என்று போதையூட்டினார்கள். "எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?" என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.
உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் 'மதிப்பை' ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் 'பொருளாதார வளர்ச்சி'. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!
"இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!
எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். 'உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே' மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். "வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்" என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.
•••
புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த 'அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி'யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!
அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், 'பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்' என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.
'புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
'அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்' என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. 'உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்' என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். 'மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே' என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!
அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, 'அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்' என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. 'எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக' உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.
இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!

Monday, September 8, 2008

ஒரு கவிதை

"கவிதையாய் காதலிக்க ஆசைப்பட்டவன் நான்...

ஒரு கவிதையை காதலிக்கும்படி ஆகிவிட்டது... "

Monday, August 11, 2008

காதல் கிறுக்கன்......

என்றும் போல் எவ்வித
மாற்றமுமின்றி பிறக்கும்இன்றைய நாட்களும்,
சுற்றமும்வரிகளுக்குள் விளக்க
முடியாதொருபுதுமையாய் நகர்கின்றன...
தனிமையும்,மௌனமும்,வெறுமையும் முழுமையும்
ஒருசேரஅமைந்த தன்மையுமாய்கடந்து செல்கின்றனதினசரிப் பொழுதுகள்...என்றோ விதைத்தஉன்னுடனான மிதிவண்டி
பயணங்கள்என் இருத்தலின் உண்மையைநினைவூட்டியபடியேநித்தமும் துளிர்க்கின்றன இன்றைய நினைவுகளாய்..
.மின்விசிறியின்எறிச்சலூட்டும்கீச்சிடும்
இரைச்சலைகூடரசிக்கபழகிக் கொண்டது
உள்ளமும்அவ்வழியேஏனைய உறுப்புகளும்...இப்பொழுதெல்லாம்இயற்கையோடு சண்டையிடுவதுஅன்றாடமாகிவிட்டது,
என்னவள் உன்னோடு ஒப்பிட்டவாறே!!கசக்கி
எறியப்பட்டகாகிதங்களுக்கு
நடுவேகண்ணீர் விட்டபடிஉன்னை
அலங்கரிக்க முடியா சாபத்தில்நிராகரிக்கப்பட்ட
வரிகள்...பரவாயில்லை...
காதல் கற்றுக் கொடுத்ததுநித்திரையிலும்
நகைக்கும்கிறுக்கன் என்ற பெயர் மட்டுமல்லகண்டபடி
கிறுக்கும் கவிஞன் என்ற பட்டமும்தான்!!!

அத்தை மகள்!!!





தாவணி ஊர்வலத்தில் முதன்முறைஒற்றை

தேவதையாய் நீ வந்திருந்தஓர் விடுமுறை

நாளில்எனைக் கண்டவுடன் உன் கால்

கட்டைவிரலால்தரையில் வடித்த

அரைவட்ட வெட்கம்...


படிப்பிற்காக நான் பட்டணம் கிளம்பியபோதுவெட்கமில்லாமல்

அழுதுநீ செய்த ஆர்பாட்டங்களைசுமந்து நிற்கும் தெருமுனை...


உன் விரல்பட்டு விடுதலையான‌'டா' போட்டழைத்த‌என் வகுப்புத்தோழியின்மிதிவண்டி சக்கர காற்று...


எல்லாம் முடிந்து போனஅக்கொடிய நாளில்யாருமறியாமல்மழையோடு கரைந்து போனஎன் கண்ணீர் துளிகள்...
தொலைந்து போன எதையோதேடியபோதுகண்ணீர் விதைத்துநினைவுகளையும் புரட்டிய‌துபழைய புகைப்பட தொகுப்பு...

அமெரிக்காவில் கைப்புள்ள...!!!



நம்மூரு பசங்க எல்லாரும் சாப்ட்வேருங்கிற பேருல அமெரிக்காவுல வந்து நைட் ஆனா புல் டைட்டா தண்ணில புரளுறாய்ங்களாம்! அப்புறம் அங்குள்ள வெள்ளக்காரப் புள்ளங்க கையப் புடிக்கிறாய்ங்களாம்! கறுப்புப் புள்ளங்களுக்கு முத்தம்லாம் கொடுக்குறாய்ங்களாம்! கேட்டா 'சாட்டர்டே நைட் பீவர்'ன்னு பிலிமு காட்டுறாய்ங்களாம்! அது மட்டுமில்லாம ஆர்குட், ப்ளாக்குன்னு டைம கண்ணா பிண்ணான்னு செலவு பண்றாய்ங்களாம்! இப்படி சின்னா பின்னான்னு சீரழிஞ்சிட்டிருக்குற பயபுள்ளங்கள திருத்தனும்னு இந்திய தூதரகத்துள இருந்து உங்கள அமெரிக்காக்கு அனுப்பப் போறாங்களாம் தல", இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் செய்யும் அட்டகாசங்களால் கடுப்பாகி, பாண்டி கத்திக் கொண்டிருக்கும்போதே கைப்புள்ள நெனப்பு வேறு எங்கோ சென்ற்து.
"எல்லாமே பயங்கர 'கிக்'கான மேட்டராவே இருக்குதே! அமெரிக்காவுல போன ஒடனே நம்ம பயபுள்ளைகள பாத்து நம்மலும் அந்த வித்தைகளை கத்துக்க வேண்டியதுதான்"
"டேய் பாண்டி, என்னடா சொல்ற? நான் அமெரிக்கா போயிட்டா நம்ம தமிழ் நாட்ட யாருடா பாத்துக்குவா?", நம்ம கைப்பு விட்டுக்கொடுக்காம பேசுற மாதிரி ஒரு ஆக்ட் விட்டாரு.
இதுதான் சான்ஸுன்னு நம்ம மூக்கன், "ஆமா, தல சொல்றது வாஸ்த்தவந்தான். தலைக்கு பதில்லா நான் போறேன்".
'ஆஹா! நமக்கே ஆப்பு அடிக்கிறானே இந்த மூக்கன்' கைப்பு சுதாரித்து, "டேய், இது என்ன சைக்கிளுக்கு காத்து அடிக்கிற சமாச்சாரமா? என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு!". கைப்பு ஆவேசமாய் கர்ஜித்தார்.
"சரி, நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்ல. நான் அமெரிக்கா போறேன்னு சொல்லிரு", நாயகன் கமல் போல கைப்பு சீன் போட்டார்.
"சிங்கம் களத்துல எறங்கிடிச்சி!", பொக்க வாயில வெத்தலயப் போட்டுகிட்டு, கத்திகிட்டு நின்னுச்சு அந்தப் பெருசு.
ஒருவழியாய் கைப்புள்ள, பாண்டி, மூக்கன், ராசுக்குட்டி எல்லாரும் அமெரிக்கா நியூயார்க் வந்து இறங்கிட்டாங்க. டைம் ஸ்கொயர் பக்கத்துல இருக்கிற பல மாடிக் கட்டடத்துல, மொட்ட மாடில ஒரு கொட்டாய்ப் போட்டு, 'வருத்தப்படாத வாலிபகர்கள் சங்கம்'னு ஒரு பெரிய போர்டு மாட்டி, சுறுசுறுப்பா தல தூங்கிட்டு இருந்தாரு. பாண்டி, பக்கத்துல இருக்குற தமிழ் நாட்டு ஹோட்டல்ல இருந்து, சங்கத்துப் பேரச் சொல்லி, மீந்து போன இட்லியும், கெட்டுப் போன கெட்டிச் சட்னியும் வாங்கிட்டு வந்தார்.
"டேய் மூக்கா, ராசு, ஓடியாங்கடா! நம்ம தல எடத்துல எவனோ படுத்துக் கெடக்குறான்டா!", பாண்டி கணைக்க, எல்லாரும் வந்து அந்த உருவத்த மொத்தி எடுத்தனர். அப்புறம்தான் தெரிஞ்சுது, அங்க படுத்துக் கிடந்தது வேற யாருமில்ல, நம்ம கைப்புள்ளதான்னு. குளிருல நடுங்கி, பாண்டிபஜார்ல படுத்துக் கிடந்த பிச்சக்காரன்கிட்ட திருடுன கிழிஞ்ச ஸ்வெட்டரும், மங்கி தொப்பியும் போட்டுட்டு தல தூங்கிட்டு இருந்ததுல பாண்டி கன்பியுஸ் ஆகி, இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் ஆகிப்போச்சு.
"ஏண்டா? ஏன் இந்த கொல வெறி? கொஞ்ச நேரத்துல என் சித்தப்பூ போன எடத்துக்கே என்னைய அனுப்பி வெக்க பாத்தீங்களடா?"
"அது வந்து தல... நீங்கன்னு தெறியாம...", ராசு இழுத்தான்.
"அதுதான் மூச்சுக்கு முன்னூறு தடவ, நாந்தான்னு சொன்னனடா?"
"அது..."
"பேசாத! பேசாத! பேசாத!" கைப்பு எல்லாருத் தலைலயும் நாலு தட்டு தட்டினார்.
அடுத்த நாள் காலைல, சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் வழக்கமான, இத்துப்போன கிழிஞ்ச பனியன், பட்டாப்பெட்டியில் வர, கைப்பு மட்டும் பனியன் தெரியிற மாதிரி ரோஸ் கலர் கண்ணாடி ஜிப்பா போட்டுக்கிட்டு, கைலிய பட்டாப்பெட்டி தெரியிற மாதிரி தூக்கிக் கட்டிக்கிட்டு சிங்க நடைப் போட்டுக்கிட்டு வந்தார்.
அப்போது மூக்கன் மூச்சித் தெரிக்க ஓடி வந்தான். "அண்ணே! அண்ணே! நீங்க இங்க இருக்குறத தெரிஞ்சிகிட்டு, கட்டதொர இங்கேயும் வந்துட்டான்ணே!"
"ஆஹா! வந்துட்டான்யா! வந்துட்டான்யா! நம்மள மாசத்துக்கு ஒருதடவையாவது அடிச்சாதான் அவனுக்கு தூக்கம் வரும்போலிருக்கே! காட்டி கொடுத்துறுவாளோன்னு பயந்து ஆத்தாக்கிட்டக் கூட சொல்லாம கொள்ளாம வந்தேனே! இதுக்காக காசுக் கொடுத்து அமெரிக்கா வந்துருக்கானே இந்த நாதாரி பயப்புள்ள!", கைப்பு அடிவயிறு லேசாய் கலங்கியது.
"கட்டதொரைக்கு கட்டஞ்சரியில்லைன்னு நெனக்கிறேன். எடுடா வண்டிய".
"பாஸ், இந்த ஆங்கிள்ள இருந்து பாத்தா, கேப்டன் விஜய்காந்த் மாதிரியே இருக்கீங்க பாஸ்", சைக்கிள் கேப்பில் கெடா வெட்டினான் மூக்கன்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அங்குலம் அங்குலமா பிரிக்கப் போறான். என்னடா ஆங்கிள் பாத்துட்டு இருக்குற ஆங்கிள்"
இறக்குமதி செஞ்ச கைப்புள்ளையோட ஆத்மார்த்த மூனு சக்கர வண்டிய மூனு பேரும் தள்ளிட்டு வர, கைப்புள்ள டைவ் அடிச்சி அதுல உட்கார முயல, அப்புறம்தான் தெரிஞ்சுது, பாண்டி வண்டியோட சீட்ட நைட்டு தூங்குறதுக்கு எடுத்து அத திரும்ப வண்டில மாட்டாம விட்டது. கைப்புள்ள டிக்கில பெரிய ப்ளாஸ்டர் போடுற அளவு காயம்.
"ஆஹா! இவனுங்க அக்கப் போரு தாங்க முடியலப்பா. இப்படி ஏதாவது ஏடாகூடமா செஞ்சே ஒடம்ப ரணகளமாக்கிட்டானுங்கப்பா"
கைப்பு அப்படியே வலிய தாங்கிக்கிட்டு ஒரு லுக்கு விட, மூவரும் வண்டிய தள்ளினார்கள்.
"டேய் டேய் டேய்! எங்கடா இந்த பக்கம் போறீங்க"
"கட்டதொர இந்த பக்கமாத்தான் வர்ரான் தல"
"இன்னுமா? இன்னைக்கு இது போதாதா? வண்டிய அந்த பக்கம் திருப்புங்கடா பொசக்கெட்டப் பசங்களா...", தப்பித்தோம் பிழைத்தோமென்று கைப்புள்ள பெருமூச்சு விட்டார்.
கைப்புள்ளையின் வண்டி ரோட்டில் வேகமாய் சென்றுக் கொண்டிருக்க, அதனை ஓர் போலிஸ் கார் வழிமறித்தது. "என்னடா இது, நம்மூரு பயபுள்ளைங்கதான் கார உள்ளவுட்டு, கைலாசத்துக்கு டிக்கெட் கொடுப்பாய்ங்க. இவனுங்களுமா?"
"தம்பி, இந்த கைப்புள்ள வண்டியோட பவர் தெரியாம உள்ள விழுந்து சாக பாத்த. அண்ணன் நல்ல மூடுல இருந்ததால தப்பிச்ச. சரி நீ யாரு?"
"ஐ எம் எ காப்"
"இங்க பாருய்யா? காப்பாம்ல காப்பு. காப்புன்னா கைல மாட்டிக்க. ஏன் ரோட்டுல வந்து விழுற", நையாண்டியாய் கைப்பு கலாய்க்க, வெவரந்தெரிஞ்ச ராசு, "பாஸ், காப்புன்னா போலிஸ்னு அர்த்தம்பாஸ்".
"போலிஸ்னா காக்கிச்ச்ட்டைல வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல!", எக்கோவாய் கூவினார் தல.
"மப்டில வந்திருக்காருன்னு நெனக்கிறேன் தல", ராசு தன்னோட இன்டெலிஜென்ட காட்டினார். இவனுங்க காமெடி தாங்க முடியாம போலிஸ் தன்னோட துப்பாக்கி பைல கைய வச்சார். இதை கவனித்த கைப்பு, "நான் ஒத்துக்கிறேன்! நீ காக்கிச்சட்டப் போடாதக் காப்புங்றத ஒத்துக்கிறேன்! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்".
தல இன்னைக்கி யார்கிட்டையும் அடிவாங்கலயேன்னு வயித்தெரிச்சல்ல இருந்த பாண்டி இதுதான் சாக்குன்னு, "என்னடா நீ காப்புன்னா பெரிய பருப்பா? எங்க தல இந்தியால எத்தன போலிஸ பந்தாடிருக்காறு தெரியுமா? எங்க பாஸ் கருணையோடு பாத்தா பில்டிங்குக்கு நடுவுல புறா பறக்கும்! கொடூரமா பாத்தா ஏரோப்ளேன் பறக்கும்!" என்று ஒரு பிட்ட போட, தல பீதியாகி "டேய்! அவனே சும்மா விட்டாக்கூட நீங்க மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே"
"சும்மா இருங்க தல. அவங்களுக்குத்தான் தமிழ் தெரியாதே தல"
"அப்படீனா, இன்னும் ரெண்டு மூனு பிட்ட சேத்துப் போடு. நம்மூர்ல எங்க நம்மல போட்டு மொத்திருவாய்ங்களோன்னு பயந்து பயந்தே பாதி உயிரு போயிரும்", என்று தல சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "நீதான் நாங்க தேடிட்டு இருக்குற அந்த தீவிரவாதியா?" என்று அந்த போலிஸ்காரர் தமிழில் சொல்ல, தலையைத் தவிர மத்தவர்கள் அப்ஸ்கான்ட்.